யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.
அந்தவகையில் நேற்றய தினம் (07) 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 47 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதிதாக அகழப்படும் குழியில் இருந்து ஒரு மண்டையோடு நேற்றய தினம் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தென்னிந்திய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்த மனிதப் புதைகுழிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.