‘சிசு சரிய’ பாடசாலை பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த மாணவன் ஒருவர் நேற்று புதன்கிழமை (03) தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
மெடிபொக்க பகுதியிலிருந்து குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகியது.
இந்த சம்பவத்துக்கு சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கே காரணம் என்பது தெரியவந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதில் குறிப்பிட்டுள்ளது.