BREAKING

இந்திய செய்திகள்குற்ற செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.பி.ஐ., விசாரணை நடத்திய இந்த வழக்கில், சபரிராஜன்,32, திருநாவுக்கரசு,34, சதீஷ்,32, வசந்தகுமார்,30, மணிவண்ணன்,32, பாபு,33, ஹெரன் பால்,32, அருளானந்தம்,38, மற்றும் அருண்குமார்,32, ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, 2019ம் ஆண்டு மே, 21ல் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு ‘இன்கேமரா’ முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினிதேவி அதிரடி தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதன்படி அவர்கள் 9 பேரும், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts