
யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நெல்லியடி – புறாப்பொறுக்கி ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். தடயவியல் காவல்துறையினரும் தடயங்களைப் பெற்றனர். கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் சடலத்தைப் பார்வையிட்டுப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இறந்தவர் யார் என நேற்று இரவு வரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.